பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் ராஜா.வயது 55. விவசாயி. இவரது தம்பி அம்மாசி வயது 52. ராஜாவுக்கும் தம்பி அம்மாசிக்கும் பொது வழிப்பாதை தொடர்பாக நிலத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அம்மாசி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அண்ணன் ராஜா, தம்பி அம்மாசியிடம் நிலப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜாவின் தலையில் அம்மாசி மண்வெட்டியால் தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் ராஜா சாய்ந்தார். சம்பவ இடத்திலே ராஜா துடிதுடித்து இறந்துவிட்டார். இதனைப் பார்த்த அம்மாசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பெண்ணாகரம் உட்கோட்ட காவல் துணை கண்கணிப்பாளர் சௌந்தர்ராஜன் பாப்பாரப்பட்டி காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பி அம்மாசியை தேடிவருகின்றனர்.