புதிய ஜவுளி கடையை திறந்த தூய்மை பணியாளர்-குவியும் பாராட்டு, அகமகிழ்ந்த முன்கள பணியாளர்கள்.

அரூரில் புதிய ஜவுளி கடையை திறந்த தூய்மை பணியாளர்-குவியும்  பாராட்டு, அகமகிழ்ந்த முன்கள பணியாளர்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் பஜார் தெருவில் செந்தில்குமார் என்பவர் புதிதாக ஜவுளிக்கடை தொடங்கினார். இந்த ஜவுளிக் கடைக்கு கொரோனா காலத்தில் தங்களது விலை மதிப்பில்லாத உயிர்களை, துச்சமென கருதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வந்த முன் களப் பணியாளர்களுக்கு கௌரவம் அளிக்க வேண்டும் என திட்டமிட்டார். இதனை  தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள கடையினை முக்கிய பிரபலங்களை கொண்டு வந்து திறந்து கடையை விளம்பரத்தை தேடிக் கொள்ளாமல், கொரோனா காலத்தில் அரூர் நகர மக்களை காப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களில் ஒருவரான சாந்தி என்பவரை, கடை திறப்பு விழாவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நேரில் சென்று சந்தித்தார். அப்பொழுது துப்புரவு பணியாளரிடம் தனது புதிய கடையை திறந்து வைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கேட்ட சாந்தி சிறுது நேரம் ஆச்சரியத்தில் உறைந்து போனார். 

தொடர்ந்து கையோடு துப்புரவு பணியாளர் சாந்தியை அழைத்து வந்த செந்தில்குமார், புதிய  கடையின் ரிப்பன் வெட்டி திறக்க வைத்தார். தொடர்ந்து கடையை திறந்து வைத்த துப்புரவு பணியாளர் சாந்தி, கடையின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும் அரூர் பேரூராட்சியில் பணிபுரிகின்ற முன் களப் பணியாளர்கள் அனைவரையும் கடைக்கு, அழைத்து அவர்களை கௌரவித்து  இனிப்பு மற்றும் பரிசுகளை கடை உரிமையாளர் வழங்கி கௌரவித்தார். 

அரூர் பகுதியில் திறக்கப்பட்ட புதிய ஜவுளிக் கடையில் துப்புரவு பணியாளர்களை வைத்து திறக்கப்பட்ட சம்பவம், கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றிவந்த துப்புரவு பணியாளர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையில் அமைந்தது. புதிய கடையை முன்கள பணியாளரை வைத்து திறப்பு விழா செய்த கடை உரிமையாளரின் செயல்பாடு, அரூர் பகுதியில் உள்ள மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மக்களுக்கு தெரிந்த பிரபலங்களை வைத்து கடையை திறப்பதற்கு பதிலாக நமக்காக தினந்தோறும் பணியாற்றி வரும் முன் களப் பணியாளர்களுக்கு ஒரு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே முன் களப்பணியாளர்கள் வைத்து கடை திறந்ததாக கடையின் உரிமையாளர் நெகிழ்ந்தார். 

இந்த சம்பவத்தால், துப்புரவு பணியாளர்களை ஒரு பொருட்டாக கருத சிலரால், அவ்வப்போது மிகுந்த மன வேதனைக்கு ஆளான   அரூர் பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து கடையின் உரிமையாளரை சந்தித்து, துப்புரவு பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் புதிய கடையினை துப்புரவு பணியாளர் திறந்து வைத்த வீடியோவை அரூர் பகுதியில் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, தூய்மை பணியாளர்களுக்கும், கடை உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.