அரூரில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் பலி
அரூரில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவர் கண்ணியப்பன் (16) உயிரிழந்தார். அரூரை அடுத்த முத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் மகன் கண்ணியப்பன் (16). இவர் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து, பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகு மோட்டார் சைக்களில் அரூர் சேலம் பிரதான சாலையில் சென்றுள்ளார். அப்போது, அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகம் அருகே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து அரசு மகளிர் பள்ளி எதிரே மோதியதில் மாணவர் கண்ணியப்பன் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
Tags:
அரூர்