தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசின் முதல் தலைமுறை பட்டதாரி, பட்டய தொழில் கல்வி படித்த தொழில் முனைவோருக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற சுயதொழில் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கென 21 நபர்களுக்கு ரூ.209.00 லட்சம் மானியம் வழங்க கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ளதாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட இனங்களுடன் கூடுதலாக போர்வெல் ரிக், கண்டெயினர் லாரி, ரோட் ரோலர், கான்க்ரீட் கலவை இயந்திரங்கள், அனைத்து வாயு கலன்களுடனான வாகனங்கள், நடமாடும் உணவகங்கள், அழகு நிலையம், சென்டரிங், உடற்பயிற்சி கூடம் மற்றும் மருத்துவ மனை உபகரணங்கள் { Scan , X-Ray Dental clinic instrument & Physiotherapy clinical instrument ) போன்ற சேவைத் தொழில்கள் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் ஆயத்த ஆடைகள், ரூபிங் எபீட்ஸ், பால் மற்றும் வேளாண் பொருட்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், பர்னிச்சர் தயாரித்தல், பவர்லும், சிறுதானிய பொருட்களிலிருந்து பிஸ்கட் மற்றும் இதர பொருட்கள் தயாரித்தல் ஆகியவை இத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 இலட்சத்திற்கு மேல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடனாக வழங்கப்படும் அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். தொழில் முனைவோர் பங்களிப்பாக பொது பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 விழுக்காடு சிறப்பு பிரிவினர் 5 விழுக்காடு செலுத்த வேண்டும். வணிக வங்கிகள் மூலம் அல்லது தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் கடனுதவி பெற மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெறும் தேர்வுக் குழுவினால் பரிந்துரை செய்யப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரைமானியமும் முறையாக கடனை திருப்பி செலுத்தினால் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.
தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இளநிலை பட்டதாரிகளாகவோ, பட்டயம் பெற்றவராகவோ, ஐடிஐ தொழிற் பயிற்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குட் பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினர் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை.
உரிமையாளர் அல்லது பங்குதாரர் நிறுவனமாக இருக்கலாம். பங்குதாரர் நிறுவனமாக இருப்பின் அனைத்து பங்குதாரர்களும் திட்டத்தின் தகுதிகளுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். கோவிட் 19 காரணமாக நேர்முகத்தேர்வு மற்றும் பயிற்சிக்கு விலக்கு கொரோனா தொற்று காரணத்தால் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் நேர்முகத் தேர்வின் மூலம் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படும் முறைக்கு செப்டம்பர் 2021 வரை அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதியுடையவையாகவும் தக்க ஆவணங்களுடனும் இருப்பின் பரிசீலனைக்குப்பின் இணையதளம் வாயிலாகவே வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழான 15 நாட்கள் பயிற்சிக்கு செப்டம்பர் 2021 - வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2021-22 ஆம் ஆண்டிற்கான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் இலவசமாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி
அவர்களை அணுகவும். தொலை பேசி எண்கள்: 04342- 230892,8925533941 , 8925533942.
Tags
தருமபுரி
