ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பி கோடுபட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2017 - 2018 திட்டத்தில் ரூபாய் 17.64 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.இது கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் இருந்தது.
தற்பொழுது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் மாதம்மாள் கோவிந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டு இந்த அலுவலகத்தை திறக்க முயற்சி மேற்கொண்டும் கடந்த அதிமுக ஆட்சியில் இரண்டு முறை திறப்பு விழாவிற்கு தயார் செய்தும் புதிய அலுவலகத்தை திறக்கப்படாமல் காலம் தள்ளி வந்தனர்.
இதனால் புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறக்க ஊராட்சி மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை புதிய அலுவலகத்திற்கு திறப்பு விழா நடத்தினர்.
இந்நிலையில் திறப்பு விழா நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கட்டிட மேஸ்திரி செல்வம் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய அலுவலக கட்டிடம் கட்டியதில் அவருக்கு 6 லட்சம் வரை பணம் தரப்படாமல் உள்ளதால் நிலுவைத் தொகையை செலுத்திய பின்னர் அலுவலகத்தை திறக்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் அவர் தனக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை அதிகாரிகள் வழங்கும் வரை அலுவலகத்தை பூட்டுவதாக கூறி திறப்பு விழா கண்ட ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சென்றார்.
திறப்பு விழா கண்ட ஊராட்சி மன்ற அலுவலகம் சிறிது நேரத்திலேயே பூட்டப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.