அரூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், நரிப்பள்ளி அருகே உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு-தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க கோரிக்கை.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங்க அருகே கல்வராயன் மலை அடிவாரத்திலிருந்து கல்லாறு உருவாகிறது. இந்த கல்லாறு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெரியப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. தொடர்ந்து அங்கிருந்து சாத்தனூர் அணையை சென்றடைகிறது. இந்த கல்லாற்றில் ஆண்டுக்கு மூன்று முதல் 5 முறை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மலை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை மட்டும் அரூர் பகுதியில் 68 மி.மீ அளவு பெய்தது.
இதனால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சேரும், சகதியுமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் தென்பெண்ணையாற்றில் கலந்து, சாத்தனூர் அணைக்கு செல்கிறது. இந்த கல்லாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருப்பதால், அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. இதனால் கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து, தண்ணீரை தேக்கி விவசாயம் செழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.