பாப்பிரெட்டிப்பட்டியில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் நகர் மற்றும் கிராமப்பறம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் 50க்கும் மேற்பட்ட நிரந்தர மின்வாரிய பணியாளர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்த மின் வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஒப்பந்த பணியாளர்கள் வழக்கமாக மின் கம்பங்களை மாற்றுவது, மின் மாற்றியை மாற்றி அமைப்பது போன்ற பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள அலமேலுபுரம் கிராமத்தில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஒப்பந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு இருந்தனா்.
அப்போது ஒப்பந்த ஊழியர் அசோக்குமார் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் . உயிரிழந்த அசோக்குமார் சடலத்தை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அசோக்குமார் மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் எனவும், உயிரிழந்த அசோக்குமாரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் , வாரிசுதாரர் அடிப்படையில் அசோக்குமாரின் மனைவிக்கு மின்சார வாரிய அலுவலகத்தில் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரியும் அசோக்குமாரின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என கோரியும் அசோக்குமாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் சிஐடியு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அலட்சியமாக செயல்பட்ட மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து பிரேத பாிசோதனை செய்யப்பட்ட அசோக்குமாாின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.