தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய கர்நாடக அரசுக்கு பாமக கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரத்தை கர்நாடக அரசு தட்டிபறிக்கிறது. மேகதாது அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும், 12 மாவட்டங்களில் பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்தை மத்திய அரசு தடுத்து தமிழ் நாட்டினுடைய உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது. பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வே போதுமானது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேஸ் சிலிண்டர் விலை உயர்வையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பெருக்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் அவசியம். தமிழகத்தில் அனைத்து ஆறுகளின் குறுக்கே 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழக அரசு நீர் ஆதாரங்களை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது. அதற்கான எல்லா முயற்சிகளையும் பாமக மேற்கொள்ளும். காவிரி ஆற்றில் மழை காலங்களில் வீணாக செல்லும் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளோரைடு இல்லாத குடிநீர் வழங்க வேண்டும். தமிழகத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாளை பொது நிதிநிலை அறிக்கையை மக்கள் வளர்ச்சிக்காக பாட்டாளி மக்கள் கட்சி தாக்கல் செய்ய உள்ளது.
அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் எத்தனால் உற்பத்தியை தொடங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதனை உடனே செயல்படுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசுக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும். இவ்வாறு ஜி.கே. மணி எம்எல்ஏ கூறினார்.