”விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்"; மாவட்ட ஆட்சியர் பேச்சு.

”விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:


சட்டம் என்பது ஒரு சமூகம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும் தனிநபர்களுக்கு
பாதுகாப்பை வழங்குவதற்கும் அமைக்கும் விதிகளின் அமைப்பு ஆகும். அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை மேலும் சீராக்க பாதுகாப்பு அதிக தேவைப்படும், பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பல்வேறு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு அமைக்கப்படும் சாலைகளில் தேவையான இடங்களில் டிராபிக் சிக்னல், மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடை, பாதச்சாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கை பலகைகள், ஆகியவை அமைக்கப்படவேண்டும். 


அதேபோன்று ஏற்கனவே அமைக்கபட்டுள்ள சாலைகளில் பழுது ஏற்பட்டிருந்தால் அவற்றை விரைவாக சரி செய்யவேண்டும். சிக்னல் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதிக பாரம் மற்றும் அதிக உயரம் லோடு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும். தொப்பூர் கணவாய் நெடுஞ்சாலை பகுதியில் விபத்துகளை தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அதிக வேகமாக செல்லும் வாகனத்தை கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும். இதில் எவ்வித தொய்வுமின்றி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


மேலும், நாளுக்கு நாள் வாகனப் பெருக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதால் சாலை பாதுகாப்புப் பணியினை மேம்படுத்துவது சம்மந்தமாகவும், விபத்துகளை தடுக்கும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துகளால் பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி விலை மதிப்பற்ற உயிர் சேதங்கள் ஏற்படுகின்றது. பெரும்பாலான விபத்துகள் மனித தவறுகளால் ஏற்படுவதால் மனித தவறுகளை குறைக்கும் விதமாக மக்களிடையே போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன், இகாப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, உதவி ஆட்சியர் திருமதி சித்ரா விஜயன், இஆப., வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.நாராயணன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு.தனசேகரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மரு.ஜெமினி, துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form