கலைத்துறையில் சாதனைப் படைத்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அரசு விருதுகள் பெற விண்ணப்பம் அளிக்கலாம் - தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஐந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க தமிழக அரசு ஆணை வழங்கியுள்ளது.
18 வயது அதற்குட்பட்டோருக்கு ”கலை இளமணி”, 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு ”கலை வளர்மணி", 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு ”கலை சுடர்மணி”, 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கு ”கலை நன்மணி”, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு ”கலை முதுமணி” என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- குரலிசை
- பரதநாட்டியம்
- ஓவியம்
- சிற்பம்
- நாடக கலைஞர்கள்
- நாதசுரம்
- தவில்
- வயலின்
- வீணை
- புல்லாங்குழல்
உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள்.
- கரகம்
- காவடி
- பொய்கால் குதிரை
- அரசன் அரசி ஆட்டம்
- மரக்கால் ஆட்டம்
- தெருகூத்து
ஆகிய கலைகள் உள்ளிட்ட கிராமியக்கலைகளைத் தொழிலாக கொண்டு கலைத்துறையில் சாதனைப்படைத்த தருமபுரி மாவட்டதைச் சேர்ந்தவர்கள் இவ்விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
மாவட்டக் கலை மன்ற விருதாளர் தெரிவுக் குழுவினரால் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப்படும்.
கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவரகுறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து சான்றுகளுடன் உதவி இயக்குநர், மண்டல கலை பண்பாட்டு மையம், திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்), சேலம் 636 302 என்ற முகவரிக்கு 15.07.2021குள் அனுப்பி வைக்க வேண்டும் மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டு துறையின் சேலம் மண்டல அலுவலகத்தை 0427 - 2386197 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
தருமபுரி