ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் நிர்வாகத்தில் உறவினர்கள் தலையிடுவதை தடுக்க கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்.

தருமபுரி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா என்பதனை கண்காணிக்க வட்டார, மாவட்ட ஊராட்சிக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் - மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவதுள்ளதாவது.

தருமபுரி மாவட்டத்தில் மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 50 சதவீதத்திற்கு அதிகமானோர் பெண் பிரதிநிதிகளாக உள்ளனர். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றியக்குழுத் தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவருக்கு ஊராட்சியின் தலைவர் என்ற பொறுப்போடு அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் என்ற பொறுப்பையும் வழங்கியுள்ளது.

இச்சூழ்நிலையில் ஒரு சில ஊராட்சி அமைப்புகளில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், சகோதரர், தந்தை அல்லது இதர உறவினர்களின் குறுக்கீடுகள் ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் இருப்பதாகவும் நிதி நிர்வாகத்தில்கூட தலையிடுவதாகவும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 73-வது சட்டத்திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை அவமதிக்கின்ற செயலாகும்.

எனவே பெண் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிடுகிறார்களா என்பதனை கண்காணித்திடும் பொருட்டு கீழ்காணும் அலுவலர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமித்து ஆணையிடப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும், வட்டார ஊராட்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலரும், மாவட்ட ஊராட்சிக்கு செயலர், மாவட்ட ஊராட்சி அலுவலரும் கண்காணிப்பாளராக செயல்படுவார்கள்.

இனி வருங்காலங்களில் மேற்காணும் விதிமுறைகளை மீறும் ஊராட்சி பிரதிநிதிகள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இல் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், பெண் பிரநிதிகளின் கணவர் அல்லது உறவினர்கள் கலந்து கொண்டதாக நிருபிக்கப்படும் மன்றக் குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதிச. திவ்யதர்சினி.., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News Desk

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post
Mini Popup Ad

A new post is available! Click here to read.

Your Logo

Subscribe to Our Notifications

Stay updated with our latest content and updates.