தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 14 காலிபதவிகளுக்கான இடங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களது அறிவுரைப்படி மேற்கண்ட காலி பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக வாக்காளர் பட்டியல்கள் 6 ஒன்றியங்களிலும் சம்மந்தப்பட்ட வாக்குப் பதிவு அலுவலர்களால் வெளியிடப்பட்டது. அதன்படி மேற்கண்டவாறு தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள 14 பதவிகளுக்கு நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 31,037 ஆண் வாக்காளர்களும், 31,060 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 62,097 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு. இராமசந்திரன், தருமபுரி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.புஷ்பராஜ், திட்ட இயக்குநர் (மகளிர்திட்டம்) திரு.பாபு, வட்டாரவளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்கள் ) திரு.ஆர்.இரவிச்சந்திரன், ஆகியோர் உட்பட 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.