உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, தருமபுரியில் உள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் தங்கள் பணியினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயனாளி வாங்கும் இருசக்கர வாகனத்தின் கொள்ளளவு 125CC மிகாமலும் வாகன விதிமுறை சட்டம் 1998ன்படி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் 01.01.2020க்கு பிறகு தயார் செய்யப்பட்டவையாக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50% சதவீதம் அல்லது வாகனத்தின் விலையில் ரூ.25,000/- இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கப்படும். எனவே, இத்திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள்:
- தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தருமபுரி மாவட்டத்திலுள்ள வக்ஃப் நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்கள் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், தமிழ்நாட்டை சார்ந்தவராக இருத்தல் வேண்டும், 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான (LLR) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும், குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ஆம் வகுப்பு (தேர்ச்சி /தோல்வி) இருத்தல் வேண்டும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 32 வக்ஃப் நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், 1. பேஷ் இமாம் 2. அராபி ஆசிரியர்கள் 3. மோதினார் 4. முஜாவர் என்ற முன்னுரிமையின் அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை
- வருமான சான்று
- வயது சான்றிதழ்
- புகைப்படம்
- சாதி சான்று
- புகைப்படம் மாற்று திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்று
- ஓட்டுநர் உரிமம்/LLR
- கல்வித் தகுதி சான்றிதழ் (குறைந்தபட்சம் 8வது தேர்ச்சி/தோல்வி)
- வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல்.
- சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்ஃபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்ற மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்
- வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல்/விலைப்புள்ளி ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் படிவத்தினை நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், தருமபுரி என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 28.07.2021 மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் காலதாமதமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், பரிசீலிக்கப்படாது என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
தருமபுரி