ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 45). இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் இருசக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகள் விற்பனை கடை வைத்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பின்புற சுவரில் துளையிடப்பட்டிருந்தது. மேலும் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த 2 சக்கர, 4 சக்கர வாகனங்களுக்கான 20 பேட்டரிகள் திருட்டு போயிருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இது குறித்து சம்சுதீன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.