பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் தேசிங்கு. இவருடைய மகன் அசோக்குமார் (வயது 28). இவர் கடந்த 6 ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அலமேலுபுரம் கிராமத்தில் புதிய கம்பம் ஒன்றை நட்டுவிட்டு அருகில் இருந்த கம்பத்தின் மின்சார வயரை பிடித்துள்ளார். அதில் மின்சாரம் சென்றதால் இவர் மீது அதிகப்படியான மின்சாரம் தாக்கியதில் மின்கம்பியில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அசோக்குமாரின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பலியான அசோக்குமாருக்கு மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.