ஏரியூர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் இளையராஜா (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவருக்கு லட்சுமி (27) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த லட்சுமியை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா காதல் திருமணம் செய்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல், வருமானம் இன்றி தவித்து வந்ததால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஏரியூர் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஏரியூர் அருகே அண்ணா நகரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.