பாப்பிரெட்டிப்பட்டி, ஜுன் 14,
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளை களில் லட்சக்கணக்கில் செங்கல்கள் தேக்கமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி,அதிகாரப்பட்டி, பள்ளிப்பட்டி,குருபரஹள்ளி,இராமியம்பட்டி, ஆத்தூர், ஒடசல்பட்டி,குன்டல்பட்டி,நல்ல குட்லஹள்ளி,முத்தம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் செங்கற்கள் தரமானதாக உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் தினசரி லட்சக்கணக்கில் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், செங்கல் உற்பத்தியாளர்களுக்க்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது.
செங்கல் உற்பத்தி மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். இவ்வாறு மக்கள் வாழ்வாதாரத்தில் பெரும் பங்கு வகித்து வந்த செங்கல் சூளை தொழில், கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், உற்பத்தி செய்யப்பட்ட லட்சக்கணக்கான செங்கற்கள் மலை போல் தேங்கி கிடக்கிறது. மேலும், அறுக்கப்பட்ட பச்சை செங்கற்களையும் சூளையிலிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போதிய வருவாய் இன்றி தவித்து வருகிறார்கள்.இது குறித்து செங்கல் அறுக்கும் தொழிலாளி சேகர் கூறியதாவது:
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் செங்கற்களுக்கு வெளியிடங்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செங்கற்களை மொத்தமாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கடந்த ஒரு மாதமாக விற்பனைக்கு அனுப்ப வழியின்றி சூளையிலேயே ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கற்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால், அறுத்த பச்சை செங்கற்களையும் சூளையில் போட வழியின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுட்ட செங்கற்களை விற்பனைக்கு அனுப்பி வைக்க வழியின்றியும், அறுத்த கற்களை வேக வைக்க முடியாததாலும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
Tags:
பாப்பிரெட்டிப்பட்டி