தமிழகத்தில் தொழில்முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் "மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி" திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மீனவர்கள், மீன்வளர்ப்போர், உதவிக்குழுக்கள் / கூட்டு பொறுப்புக் குழுக்கள் /மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் / தனிநபர் தொழில்முனைவோர் / தனியார் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பொது பிரிவினருக்கு 25 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மகளிருக்கு 30 விழுக்காடு மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தருமபுரி மீன்வளம் மற்றும் மீனவர் நல உதவி இயக்குநர் அலுவலகம், 1/165 A, ராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (அஞ்சல்) தருமபுரி 636705 (தொலைபேசி எண் : 04342 296623) என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு உரிய விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:31.07.2021. மேலும், இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:
தருமபுரி