நீரை வைத்து தமிழகத்தை தாக்கும் அண்டை மாநிலங்கள் - பி.ஆர். பாண்டியன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அடுத்த நாச்சிகுப்பம் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யார்கோள் எனும் இடத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டி உள்ளது.


இதனால் தென்பெண்ணை ஆறு தண்ணீர் இன்றி அழிந்து தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை,கடலூர் உள்ளிட்ட பகுதிளில் உள்ள விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.


எனவே அணை கட்டிய கர்நாடக அரசு மற்றும் இதற்கு துணை நிற்கும் ஒன்றிய அரசு ஆகியவற்றை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் கிருஷ்ணகிரியில் ஆர்பாட்டம் நடந்தது.


அப்போது பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: ஒன்றிய அரசு நீர் பிரச்சனைகளை முன்வைத்து தமிழகத்தில் தாக்குதல் நடத்துகிறது. தென் இந்தியாவை பிளவுபடுத்த மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. தொடர்ந்து ஆந்திராவை தூண்டிவிட்டு பாலாற்றில் அணை கட்டுகிறது.



தென்பெண்ணையின் குறுக்கே மற்றும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட துணை போகிறது. அதேபோல் கேரளாவில் முல்லைபெரியார் அணையில் புதிய அணை கட்டி தென்மாவட்டங்களை அழிக்க துணை போகிறது.


தமிழகத்தை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக புதிய அணைக்கட்டுதல் என்கிற பெயரில் ஆந்திராவையும், கர்நாடகாவையும், கேரளாவையும் தூண்டிவிட்டு அணைகளை கட்ட விட்டு துணை நிற்கிறது.


இந்த மாநில அரசுகள் சட்ட விரோதமாக அணை கட்டுவதை பிரதமர் மோடி வேடிக்கை பார்ப்பதை அனுமதிக்க கூடாது. உச்ச நீதிமன்றம் தானே ஒரு குழு நியமித்து நீர்நிலைகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும். அதற்கான மேல்முறையீட்டு மனுவை தமிழக முதல்வர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் பேசினார்.

தகடூர்குரல்

தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், மாவட்ட செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form