அரூர் அரசு மருத்துவமனையில் கண்தான இருவார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமினை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா தொடக்கி வைத்தார். இந்த முகாமில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் ஜி.சித்ரா பேசுகையில், ஒருவர் கண் தானம் செய்வதால் இரண்டு நபர்கள் பார்வையை பெறுவார்கள். இறந்த 6 மணி நேரத்துக்குள் கண்களை தானம் செய்ய வேண்டும். இறந்த நபரின் கண்களை வீட்டில் இருந்தாலும், மருத்துவ குழுவினர் நேரடியாக வந்து பெற்றுக்கொள்வார். கண்தானம் செய்ய வயது, இனம், சமுதாய நிலை எதுவும் தடையல்ல. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார். இதில், கண் மருத்துவர் ஏ.வெண்ணிலா தேவி, கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கண் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில், மோட்டார் வாகன ஆய்வாளர் கோ.சிவக்குமார் தலைமை வகித்தார். ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பெறுவோருக்கு கண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Tags:
அரூர்